கடந்த இரண்டு நாட்களாக வலையுலகை சுற்றிவரும் இந்த காணொளிக்காக பதிவர்கள் கொதித்துப்போயுள்ளதை பல்வேறு இடுகைகள் காட்டுகின்றன.
அதிலும் குறிப்பாக கோவி அண்ணன், ஒரு நிதர்சனத்தை கொஞ்சம் அதிகமாகவே கூறியுள்ளதாகவே கருதுகிறேன். நாம் நாம் வலையுலகை நம்முடைய சொந்த மனவெளிப்பாட்டிற்கான இடமாகத்தான் பாவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இலங்கைத் தமிழர்களுக்கு கடந்த ஒரு வருடமாக நேர்ந்து கொண்டிருக்கும் உச்சபட்ச அவலத்தை வலையுலகில் கூவிக்கூவி கூறினாலும், அது சென்றடைந்தது தரையிலிருந்து பத்தடி உயரத்தில் அண்டவெளியில் வாழும் பதிவர்களுக்கு மட்டுமே.
சுயவிருப்பம் இல்லாமல் கூட, இன்றய சமுதாய ஓட்டத்திற்கு ஈடுகொடுக்கவேண்டி சொந்த ஊரிலிருந்து பிடி மண்கூட இல்லாமல் ஏதோ ஒரு ஊரிலோ, நாட்டிலோ பணி செய்து அண்டிப் பிழைத்து வருகிறோம்.
உணவு, உடை, உறைவிடம் போன்ற மனித அடிப்படைத் தேவையைக் கூட தன் சொந்த உழைப்பில்லாமல் பெற்றுவாழும் ஒட்டுண்ணி வாழ்க்கையை வாழபழகி அதில் இன்புற்று வாழ்ந்து வருகிறோம்.
இனி, இனம், மொழி, சமூகத்திற்காக களத்தில் இறங்கி, மாற்று கருத்துடையோர், அரசு இயந்திரம், அரசின் கொள்கைகளை எதிர்த்து பணியாற்றத் துணிவோர் எண்ணிக்கை, விரல்களின் எண்ணிக்கையைத் தாண்டுமா என்பது சந்தேகமே!
ஆனால், அதே சுகவாசி பதிவுலகம் தான் தனி மனிதனின் உடல்நிலையை மேம்படுத்த தன்னாலான உதவியை தாராளமாக வழங்கியது என்பதும் கண்கூடு. தேனீக்கள் கூடிக்கட்டிய தேன்கூடு.
மொத்த தொகையை முதலில் கேட்டதும், அதிர்ச்சியடைந்த தனியுள்ளங்கள் கூட தன்னாலான சிறுதுளிகளை சேகரிக்க ஆரம்பித்ததும், அதே சிறு சிறு துளிகளே இரண்டே வாரத்தில் பெரும் வெள்ளமானதையும் கண்டோம். இதை நிறைவேற்றியதில் பெரும் பங்கு பதிவர்களே சொந்தம்.
ஆக, இந்த இரண்டு சம்பவங்களையும், பதிவர்களின் செயற்பாட்டையும் ஒப்பு நோக்குகையில் தானாக ஒரு உண்மை வெளிவரும். அது,
ஆழமான, நீளமான கடலாக இருந்தாலும் நீந்தி கடக்க பதிவர்கள் தயார் தான். ஆனால், அதிலிருக்கும் திமிங்களங்களும், சுறாக்களும் தன்னை சூறையாடாது என்ற குறைந்தபட்ச உயிர் உத்திரவாதத்தினை எதிர்பார்க்கிறார்கள் நம் பதிவர்கள்.
இதை தவறெனக் கூற எந்த முகாந்திரமும் இல்லை. ஒரு கொடூர நிகழ்ச்சியால் தன் இனம் அழிவதைக் கண்டு கொதிக்கும் நண்பர்கள், அடுத்தவரில் உதவியை எதிர்பார்க்கும் முன், தான் களத்தில் இறங்கிய பின் மற்றவர்களை அழைத்தால் தான் அந்த போராட்டம் வெற்றியை நோக்கி நகரும்.
அது இல்லாத பட்சத்தில் வார்த்தைப் போருக்கு குறைவேதும் இராது!!!