ஏனென்றால் நானொரு பிளாக்கர்!!!




அறை நண்பர்களுடன் சாதாரணமாய்
பேசும் போதும் விவாதிப்பேன், ஏனென்றால்
நான் ஒரு பிளாக்கர்!

சாப்பிடும் போதொல்லாம்
குறை சொல்வேன், ஏனென்றால்
நான் ஒரு பிளாக்கர்!

வீட்டில், வேலையிடத்தில் யாருடனும்
சிரித்து பேசமாட்டேன், ஏனென்றால்
நான் ஒரு பிளாக்கர்!

எனக்கு பிடிக்காவன், நல்லது
செய்தாலும் சண்டை போடுவேன், ஏனென்றால்
நான் ஒரு பிளாக்கர்!

என்மேல் குற்றம் சாட்டினால்,
அழகாய் சமாளிப்பேன், ஏனென்றால்
நான் ஒரு பிளாக்கர்!

என்சுய விருப்பு-வெறுப்புகளையும் தாண்டி
என் இமேஜுக்காக பேசுவேன், ஏனென்றால்
நான் ஒரு பிளாக்கர்!

திரைப்படம் பார்க்கையில் தேடி
தப்புகளை பெரிதாக்குவேன், ஏனென்றால்
நான் ஒரு பிளாக்கர்!

ஒவ்வொரு வார்த்தை(வரியின்), உட்கருத்தின்
உட்கருத்தையும் கண்டுணர்வேன், ஏனென்றால்
நான் ஒரு பிளாக்கர்!

ஆகமொத்தம், நான் நிம்மதியாக இருக்கிறேனோ
இல்லையோ, அடுத்தவனை நிம்மதியாய்
இருக்க விடமாட்டேன், ஏனென்றால்
நான் ஒரு பிளாக்கர்!

உன்னைப் போல் ஒருவன் – என்னோட கவலை…


கடந்த ஒருவாரமாக கடுமையான ஆணிகளை புடுங்க வேண்டியிருந்ததாலும், ஆணிகளைப் புடுங்கும் போது உடம்பில் பல இடங்களில் ஆணிகள் கீறிவிட்டதாலும், இன்று ஓய்வுக்காக விடுப்பு எடுத்துவிட்டேன். நேற்றிரவு படுத்தவன் இன்று மதியம் ஒருமணிக்குத்தான் எழுந்தேன். எழுந்து பதிவுக கடமையை ஆற்றுகையில், உன்னைப்போல் ஒருவனுக்கு வந்திருக்கும் விமர்சங்களும், எதிர் – ஆதரவு வினைகளை அளவுக்கு அதிகமாக படித்ததன் விளைவாக, படத்தினை அரங்கில் காண அதிரடியாக கிளம்பி, பார்த்தாயிற்று.

படத்தைப் பற்றி பல விமர்சனங்கள் வந்துவிட்டதாலும், படத்தில் உள்ள உள்குத்து, வெளிக்குத்துகளைப் பற்றியும் அளவுக்கு அதிகமாக தேவையில்லாமல் வந்து விட்டதாலும் அவைகளைப் பற்றி பேசாமல், படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே எனக்குத் தோன்றிய ஒரு கவலையை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

நடிப்பு சிம்மங்களுக்கிடையே அற்புதமான நடிப்பு போட்டிக்குள் அசாத்திய உடல் வலிவுடன், காண்பவர் போறாமைப்படும் வண்ணமான கட்டுடலுடன் வந்த கணேஷ் வெங்கட்ராம் தான் என் கவலைக்கு காரணம்.


இத்துனை அபார உடலமைப்பும், நல்ல நடிப்பு திறனும் கொண்ட இவரை இனி இதுமாதிரியான ஆண்மையான பாத்திரத்தில் பார்க்க முடியுமா? இல்லை படம் முழுக்க நெஞ்சை நிமித்தியவாரு நடித்துவிட்டு கடைசியில் நோஞ்சான் கதாநாயகன் கையில் இரண்டே இரண்டு அடி மட்டும் வாங்கி மூர்ச்சையாகும் பாத்திரங்களில் தான் பார்க்க முடியுமா என்பது தான் என் கவலை. (ரியாஸ்கானுக்கு இந்த மாதிரியான பாத்திரங்களில் மட்டுமே கொடுக்கப்பட்டது)


(அப்பாடா, பதிவுலக கயமையை ஆத்து, ஆத்துன்னு ஆத்தியாச்சு)

எம் பேரு குமாரு இல்ல...

அதிகாலையில் பற்றவைத்த அடுப்பில், ஒன்பதரை மணிக்கும் மேலாகத்தான் தனலை குறைக்க முடியும், முடிந்தது. முகத்தை அலம்பிவிட்டு அம்மா கொண்டு வந்த எழுமிச்சை சாதத்திற்கு ஊருகாயும், கடையில் இருக்கும் பருப்பு வடையையும் வைத்து சாப்பிட ஆரம்பிக்கும், அதே நேரத்தில் அம்மாவும் தனது பாட்டை ஆரம்பித்த்து, “ஏன்டா, அந்த சோழவந்தான்காரன் இன்னிக்கி வந்தா புதுசா ஏதாவது மாப்பிள்ளை படம் இருக்குதான்னு கேட்டு வையி” என கல்யாண வயசில் பொண்ணை வச்சிருக்கும் அம்மாக்களின் பேச்சினை தாளம் தப்பாமல் பேசியது. தங்கச்சி கண்ணாலத்துக்கு அப்புறம் தான் அத்தை மகளை, எனக்கு பொண்ணு கேட்டு பேசவே முடியும்.




நாலுவாய் சாப்பிடுவதற்குள், வாசப் பக்கமிருந்து ஒரு சத்தம் ”யேய் குமாரு, ஏட்டையா வந்திருக்காரு பாரு. சீக்கிரம் வந்து டீயப் போட்டுகுடுடா” பாதியிலே எந்திரிச்சு, ”அய்யா, சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன், கொஞ்சம் பொறுங்க முடிச்சிட்டு வந்திடுறேன்” சொன்ன வேகத்தில் சாப்பாடை அள்ளித் தின்றுவிட்டு. அடுப்புக்கு வந்து பாலுக்கு சூட்டை அதிகப்படுத்திக் கொண்டே, ஏட்டய்யாவிடம் “என்னங்கையா இந்தப் பக்கம்?, ஏதும் பிரச்சனையா?” எனக் கேட்ட குமாருக்கு, ”ஒன்னுமில்லைப்பா, நம்ம ஒன்றியத்தை பாக்க வந்தேன்” என்றார்.


பயன்படுத்திக் கொண்டிருக்கும் தேயிலையை வைத்து இன்னும் நாலுபேருக்கு தேத்தண்ணி போட முடியும், இருந்தாலும் தேயிலையை மாற்றிவிட்டு, வென்நீரில் இரண்டுமுறை அலசி கொஞ்சம் இஞ்சியை தட்டி அதே கோப்பையில் வைத்து வேகவிட்டு, பாலை பக்குவமாய் ஆடையில்லாமல் எடுத்து தேயிலை நீர்விட்டு, ஏட்டையாவின் தேவைக்காக குறைவாக வெள்ளை சக்கரை விட்டு ’முறையாக’ ஆற்றி ஐய்யாவிடம் எடுத்து வந்தான் குமாரு.



தம்ளரின் அடிபாகத்தில் தண்ணீரில்லாமல் துடைத்து, காலை தினதந்தியில் மூழ்கியிருந்தரை ’ஐய்யா டீ’ என கூப்பிட்டு கொடுத்துவிட்டு, கடைக்குள் வந்து வீச்சு வீச்சென கத்திக்கொண்டிருந்த வானொலி பெண்ணின் சத்ததை அளவாக வத்துவிட்டு மீண்டும் ஐய்யாவிடம் வந்து சேர்ந்தான்., தனது சந்தேகத்தை தீர்ப்பதற்காக.



”ஐய்யா, போனவாரம் திண்டுக்கல்ல இருந்து வந்த எங்க பெரியப்பா மகன், என்னைய அவங்கூட வியாபாரத்துல சேந்துக்கச் சொல்றான். அது ஏதோ புது கம்பெனியாம். அதான், அதைப் பத்தி உங்ககிட்ட கேட்டிட்டு சேரலாம்ன்னு இருக்கேன். நீங்க தான் விசாரிச்சு சொல்லணும்” என்ற குமாரை, மேலும் கீழுமாய் பார்த்துவிட்டு, “அவன் உன்னோட சொந்தக்காரன் தானே, நம்பி சேந்துக்க வேண்டியது தான” என்ற அய்யாவுக்கு தன்னோட கேள்வியை விளக்க ஆரம்பித்தான் குமாரு



“அதில்லைங்கைய்யா, அதென்னவோ பதினஞ்சாயிரம் ரூவா கட்டி சேர்ந்தா, ஒரு காந்த கடியாரம் தருவாய்ங்களாம். அடுத்து நாம் ரெண்டு ஆளுகளைச் சேர்ந்து விட்டால் நம்க்கு கொஞ்சம் காசு தருவாய்ங்களாம், அவிய்ங்க ஆளுக்கு ரெண்டு பேர சேத்துவிட்டா, அதுக்கும் நம்க்கு காசு தருவாய்ங்களாம். இதே போல நாம சேர்த்து விட்ட ஆளுகளுக்கு கீழ யார் சேர்ந்தாலும் நமக்கு காசு வருமாம். ஒரு தடவை பதினஞ்சாயிரம் ரூவா கட்டுறதும், ரெண்டு பேர சேர்த்துவிடுறது தான் நம்ம வேலையாம். அடுத்து மாசா மாசம் நமக்கு பணம் வருமாம். அதான் சேர்றதுக்கு முன்னாடி, அந்த கம்பேனியைப் பத்தி உங்க யார்கிட்டயாவது விசாரிச்சுட்டு சேரலாமுன்னு தான் கேக்குறேன். உங்களுக்கு அந்த கம்பனியைப் பத்தி தெரியுமா?, நல்ல கம்பனி தானா? நம்பி சேரலாமா?” ஒரே மூச்சில் ஒப்பித்த குமாரை மேலும் கீழுமாக பார்த்த ஏட்டய்யா,




“குமாரு,. அந்த கம்பனியப் பத்தி யாராச்சும் கொறை சொல்லியிருந்தாதான் எங்களுக்கு தெரியும், அப்பிடி யாரும் சொல்லாத வரைக்கும் இதெல்லாம் போலீஸுக்கு தெரியாதுப்பா. நீயி ஒஞ்சொந்தக்காரன் மேல நம்பிக்கை இருந்தா மட்டும் சேரு. இல்லாட்டி விட்டிரு” என நழுவிய ஏட்டய்யாவை விடவில்லை குமாரு“சொந்தக்காரன் மேல நம்பிக்கை இருக்கு, நெறையா பணம் வர்றதா அவன் சொல்றதக் கேக்க ஆசையாவும் இருக்கு. ஆனா, பணத்தை மோசடி பண்ணிட்டான்னு அடிக்கடி டீ.வில ஆளுக அழுகுறதப் பாத்தாலும் பயமாவும் இருக்கு. அதான் போலீசுல தெரிஞ்ச ஆளுக இருக்கும் போது விசாரிச்சுக்கிட்டு சேரலாமுன்னு இருந்தேன், ஆனா, நீங்க தெரியலைன்னு சொல்றீங்க, என்ன பண்ணுறதுன்னு தெரியலை”



“இல்லை குமாரு, அந்த கம்பெனி உண்மையிலயே இருக்குதான்னு பத்திர ஆபீஸ்ல சரி பார்க்கலாம். நீ வேணும்ன்னா திண்டுக்கல் பத்திர ஆபீசுக்கு போய் அந்த கம்பெனி பேரைச் சொல்லி கேட்டுப்பாரு, எனக்கு வேலையிருக்கு நா வர்றேன்” என வழிகாட்டிப் பிள்ளையாராக எழுந்து போய்விட்டார், ஏட்டைய்யா.



தன் முயற்சியில் சற்றும் மனந்தராத நம்ம குமாரு, பத்திரபதிவு ஆபீசுக்குப் போய் ப்யூனை ஓரங்கட்டி, சரி கட்டியதில், ப்யூன் ஒரு மேசைக்கு வழி காட்டினார். அங்கே அந்த கம்பெனியின் பேரைச் சொல்லி கேட்டதும், தலையணை அளவு பேரேட்டில் தலையைவிட்டு குடைந்து “ஆமா, அப்பிடி ஒரு கம்பெனி போன வருசம் பதிஞ்சிருக்காங்க. நீ எதுக்கு இதை பாத்துக்கிட்டு இருக்க? என கேட்ட அபீசரிடம், மேலே ஏட்டய்யாவிடம் சொன்ன அனைத்தையும் சொல்லவும், கொட்டாவி விட்டபடியே, தம்பி, பதினஞ்சாயிரத்துக்கு இவ்வளவு கேள்வி?, இவ்வளவு அலைச்சலா? இதவிட சேல்ஸ் டேக்ஸ் ஆபீஸ் போய் கேட்டீங்கன்னா, போன வருசம் எவ்வளவு டேக்ஸ் கட்டினாங்கன்னு பார்த்தீறலாம், அதுல இருந்து கம்பெனியோட நடவடிக்கை தெரியும், போ..போ”.என கேலியாக விரட்டினார்.



லேசா கண்ணைக் கட்டின மாதிரி இருந்த்து. ஆனாலும் விட முடியாதுல்ல. நம்ம சொந்த ஊருக்குள்ல இந்த தகவலைக் கூட சேகரிக்க முடியலைன்னா, இத்தினி வருசம் பொழச்ச பொழப்புக்க அர்த்தமில்லாமையில போயிடும். நாலு நாள் இடவெளியில குமாரு ஆணீயடிச்ச மாதிரி போய் நின்ன இடம், அதான், அதே தான்…




வருமான வரித்துறை அலுவலகம். அங்கேயும் அதே மாதிரி ப்யூன் – மேசை – ஆபீசர் – அதே கேள்வி – அதே மாதிரியான பதில் – ஆபீசரின் அதே கேள்வி – அதே முழு விளக்கம் – அதே மாதிரியான நக்கலுடன், தம்பி இதை நீங்க சென்னையில இருக்குற ரிசர்வ் பேங்க் ஆபீஸுல போய் கேட்டீங்கன்னா, அந்த கம்பெனியோட முழு வரவு – செலவயும் பார்த்து சொல்லிடுவாங்க. நீங்க நம்பிக்கை வந்துச்சுன்னா முதலீடும் பண்ணலாம், என நக்கலாக முடித்தார். இதுக்கு மேலயும் இது ஆகாது, மனம் சொங்கித்தான் போனான் குமாரு.




ஒரு வாரத்திற்கு பின் அதே காலை நேரம், கடைக்கு வந்த ஏட்டைய்யாவைப் பார்த்த்தும் நடந்த்து நடந்து போச்சு. இவரை எப்பிட்யாவது சரிகட்டணும் என மனதுக்குள் நினைத்திருந்த குமாரைடம், ”என்ன குமாரு, பத்திர ஆபீஸுல போய் கேட்டீயா? என்ன சொன்னாய்ங்க” என்றதும்.



அதுக்கெல்லாம் எங்கங்க நேரமிருக்கு, என் தம்பி வந்தான் நான் பதினஞ்சாயிரம் பணத்தை குடுத்து சேந்துட்டேன். எனக்கு அந்த காந்த கடியாரமும் தந்துட்டாய்ங்க, நானும் ஒரு ஆளா நம்ம சைக்கிள் கடை முருகனை சேர்த்துட்டேன், ரெண்டாவது ஆளு தான் வேணும், நீங்க சேர்றீங்ளா ஏட்டைய்யா, இந்த காந்த கடியாரம், சக்கரை நோயாளிகளுக்கு ரத்த அழுத்ததை கட்டுப்படுத்துமாம், ராத்திரிக்கு நல்லா தூக்கம் வருமாம்...” என பல்லவி பாடி முடிக்கும் முன்...

“ஏன்ய்யா, இந்த மாதிரி அடையாளமில்லாத கம்பனிகளை நம்பி பணத்தை கட்டுறீங்க. நாளைக்கி ஏதாச்சும் ஒன்னுன்னா, போலீஸ் சரியில்லை, ஒழுங்கா வேலையே செய்யுறதில்லைன்னு கூட்டம் போட்டு அழுதுகிட்டே, டீ.விக்கி பேட்டி குடுக்க வேண்டியது. உங்களை மாதிரி ஏமாற ஆளுக இருக்குது வரைக்கும் ஏமாத்துறவன் இருக்கத்தான் செய்வான்” ன்னு கத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் போன ஏட்டைய்யாவைப் பார்த்து வாய்பிளந்து நின்றிருந்தான் குமாரு.



ஆனால், குமாரின் மனசு பேசியது என்னவாக இருந்தது?,

ஏன்ய்யா முதல்லயே கேட்டாலும், விசாரிச்சு சொல்ல மாட்டீங்க. புகார் குடுத்தாலும், ஆளை புடிக்க மாட்டீங்க. ஆனா, இளைச்சவன் சிக்கினா மட்டும் அலையவிடுவீங்க. அதானால, நான் சேக்க வேண்டிய இன்னொரு கிளைக்கு உங்கள மாதிரி அரசங்க ஆளுகளைச் சேர்த்து, எனக்கு நட்டம் வந்தா அது உங்களுக்கும் தான்னு ஆக்கலை, எம்பேரு குமாரு இல்ல...

நாங்களும் எம். எல். எம் கம்பெனில நாலு நாள் கோர்ஸு படிச்சிட்டு தான் வந்திருக்கேன்டியேய்...

 
©2009 அப்பாவி | by TNB