செங்கொண்டைச் சேவல் கூவி ஆரம்பித்து வைக்கும் நாள், வெய்யக்காலத்தில் மட்டும் நீண்டு நெடியதாகத் தானிருக்கும். சேவலில் குரலைக் கேட்டு சோம்பல் முறிக்கும் பட்சிகள் மெல்ல மெல்ல கீச்சுக் கீச்சுவாகி மெதுவாய் கரைதலாக மாறும் வேளையில், தலைக்கணமேறி நிற்கும் வாலிப மனம் சிறிதாய் விழிப்பைப் பெறும். காலையில் தான் கடன்கள், பிரம்மத்திற்கில்லை என சோம்பல் மெல்ல, மெல்ல தன்வசத்திற்கு மனதைத் திருப்ப, காதலின் பால் கூட்டிச் செல்லும்.
நீண்டிருந்த உடலோ குறுகி, அணைப்பிற்கில்லாமையை வெளிக்காட்டாமல், போர்வையில் முடங்கி தன் காதலை அல்லது காதலின் தேடலை வெளிச்சொல்லும். ஏங்கி நிற்கும் எண்ணமெல்லாம், தப்பிநிற்கும் வரிசையில் மூளையின் திரையைத் தொட்டுத் தொட்டுச் செல்லும். கண்ட காட்சிகளெல்லாம் கனவாக நினைவலைப் பெட்டியில் பாதுகாப்பாக
பதுக்கி வைக்கப்படும். பதுக்கப் பதுக்க சொர்கமாக தெரியும் கனவுகளெல்லாம் இதழில் புன்னகையாக வெளியேறி விடுமோ, என்னவோ.
காகத்தில் கரைதலுக்கு, தூக்கமில்லா கனவான்களின் நடையோசைக்கும் அசையாத மனம், அந்த சல்,சல்,சல் என்று தெளிக்கும் நீரின் ஓசைக்கு மட்டும் இசைந்தா கொடுக்கும். அசைந்தும் கொடுக்காது, இசந்தும் கொடுக்காத மனதை அடுத்துவரும் சர்,சர்,சர் எனும் பெருக்கும் ஒலியோசை மட்டும் சலனப்படுத்தத் தான் முடியுமா?
ஒவ்வொரு கவிதையும், காதலும் கனவாக வெளிப்பட்டு காற்றில் கரைந்து காணாமற் போகும் போதும், உடலோ இழந்ததை தேடாது, இருக்கு இன்னும் பல என புரண்டு படுத்தே அடுத்ததைத் தேடும். வெட்கமில்லாத அவனிடம், வெட்கமே இல்லாத கனவும் தன் காதலின் அடுத்த பாகத்தை காட்ட ஆரம்பிக்கும். மனமொன்றி காதற்காட்சியில் கனவைக் நினைவாக்கிக் கொள்கையில், நாசிவழி வரும் காற்று சவ்வூடுபரவலில் தகவலாய் மாறி மூளையை எட்டும் போதுதான் தெரியும், அது சாணத்தின் மணமென்று! கூரிய மூக்கை அழுத்தித் துடைத்து, விலகிய போர்வையை முழுக்கப் பொத்தி விட்டதைத் தொடும் போது, கண்ட இன்பத்தில் பாதியைக் காணோம்.
வேதாளத்திடம் சிக்கிய விக்கிரமாதித்யன் இன்புற்றானோ?, துன்புற்றானோ? எனக்கென்ன? கனவுகளில் சிக்கி உழலும் நான் கண்டதெல்லாம் இன்பம், இன்பம், இன்பம் என மனம் கொக்கரிக்கும் வேளையில் சுள்ளென்று சிறு நீர்த் துளி குறிதவறாமல் முகத்தில் விழும்போது வரும் கோவம், மடைதிறந்த வெள்ளம் தான்.
என் இன்பத்தை தொலைப்பதில் யாருக்குப் புண்ணியமென நோக்க, போர்வை விளக்கி, முகத்தைத் துடைத்து, கண்ணைக் கசக்கிப் பார்த்தால் “வெள்ளிக் கிழமையும் அதுவுமா, எருமை மாடு எப்பிடி தூங்குது பாரு” எனச் சொல்லிக் கொண்டே அடுத்த மூலையில் பசுவின் கோமியத்தை தெளித்துக் கொண்டிருந்தால் வாயாடி அக்கா.
அப்போ...அப்போ... முகத்தில் பட்டது, பசு மாட்டின் ___________?(கோடிட்ட இடங்களை நிரப்புக)