இருக்கும், எங்காவது...




வேலைக்குப் போகும்


வேளையெல்லாம்,


அக்குளத்தைக் கடப்பேன்.



அவ்வேளையில் மறக்காமல்


அவ்விரு நீர்


உடும்புகளைத் தேடுவேன்



கருப்பாய், நீளமாய்


கரையில் படுத்தோ., அல்லது


நீரில் நீந்திக் கொண்டிருக்கும்.



ஆனால், இரண்டையும்


ஒன்றாக பார்த்ததில்லை.


சேர்வதில்லை போலும்,



ஆணும், ஆணுமோ. இல்லை


பெண்ணும், பெண்ணுமோ.


கூடா நட்பல்லவா.



ஆனாலும், இணையிருக்கும்


இடுக்கிலோ., அல்லது


பக்கத்து காட்டிலோ.



இல்லாமல், இவையே


இருந்திருக்காதே. இருக்கும்


எங்காவது...

எத்துனை இ(து)ன்பம்

அன்றைய வேலையை அதற்கு முந்தய நள்ளிரவே தீர்மானித்து விட்டது. ”உன்னுடைய இயந்திரத்தில் தொந்தரவு. காலையில் வரவும்” என்ற வாடிக்கையாளரின் குறுந்தகவல் அடுத்த நாள் முழுவதையும் ஆக்கிரமிக்கக்கப் போவதை மின்னலான எண்ணத்தின் மூலம் உணர்ந்து கொண்டவனாய் தூங்கப்போனேன்.

கட்டுப்பாட்டு அறைக்கு(அலுவலகம்) போகாமல் நேரடியாக வாடிக்கையாளரின் இடத்துக்கு குறித்த நேரத்துக்கு புன்னகையோடு(!?) போய்ச்சேர்ந்தேன். பலியாட்டிற்கான முழுமரியாதையையும் கொடுத்து வேலையை பாழ்பண்ணும் இயந்திரத்திடம் அழைத்துச் சொன்றனர். இன்றைய பொழுது இயந்திரத்தோடுதானென்பது எனது கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தது. பின்னே தொந்தரவு என உணரப்பட்டதாவது தேவையான வெப்ப நிலைக்கு மிக மெல்லிய வேறுபாட்டோடு நிற்கும் இயந்திரத்தின் வெப்பமே.

இதை சரிசெய்ய பெரிய வேலையிருக்காது, ஆனால், இயந்திரத்தின் கணிணியோடு சின்னச்சின்ன பின்ன விளையாட்டுகளோடு விளைவுகளை கண்கொட்டாமல் கண்டபடியே இருக்கவேண்டும். சாதகமானால் ஆர்ப்பாட்டமாய் கைகுலுக்கி புன்னகையோடு விடைபெறலாம். பாதகமாகவே இருந்தால் சீன கெட்டவார்த்தைகளை பேசி, கேட்டு வரவேண்டியிருக்கும்.


பத்துமணிக்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த ஃபைன் ட்யூனிங் பண்ணிரெண்டு மணிவரை கண்ணாமூச்சி விளையாட்டாகவே போனது. குறுக்கும், மறுக்குமாக (அ) மேலும், கீழுமாக (அ) எண்ணிக்கையை ஏற்றலும், இறக்கலுமாக ஏதேதோ செய்தும், ஆங்கிலத் தேர்வின் விடைத்தாள் போல பல்லிளித்துப் போனது.


மதியச் சாப்பாட்டிற்காக கால்கடுக்க நடந்து போய் உண்டாலும் உள்ளம் நிறையவில்லை. காரணம் தான் தெரியுமே. மீண்டுமொரு மின்னல் வேக நடையில் இயந்திரத்தை அடைந்து தோன்றிய யோசனைகளெயெல்லாம் அடுத்தடுத்து அமல்படுத்தியதில் மூன்றாம் யோசனையே கைகொடுத்தது. ஃபைன் டியூனிங் ஃபைனாக வேலை செய்ய ஆரம்பித்தது. அப்பாடா என்ற வார்த்தையையும் பெருமூச்சையும் விடுத்து மனம் நிம்மதியடையத் துவங்குகையில் தான் அடுத்த தொல்லையின் அத்யாயம் துவங்கியது.

செய்த மாற்றம் சரியாக வேலைசெய்கிறதா என முழு இயந்திரத்தையும் இரண்டு மணிநேரம் ஓட(?)விட்டு சரிபார்க்க வேண்டும். இயந்திரம் ஓடிக்கொண்டிருந்த ஒரு மணிநேரமும் அந்த அடர்ந்த இயந்திரக்காட்டில் வரைமுறைக்குட்பட்ட ஆனால் அயற்சியைக் கொடுக்கும் இரைசலினை உணரத் துவங்கினேன். எப்பவே கடந்து போகும் யாரோ ஒரு மனிதனைத் தவிர வேலையேதுமற்ற நிலையில், கட்டாயம் இருந்தே ஆகவேண்டிய சூழ்நிலையில், என்ன செய்வது?


சரியென்று மகிழ்ந்த இயந்திர பிழை திருத்தமே மனதிற்கு இம்சையாகிப் போனதே! அலப்பரையில்லாமல் அதுபாட்டுக்கு நல்ல(இயந்திர)பிள்ளையாக ஓடுகின்றது. எப்போதும் இடைக்கால வெற்றியை முழு வெற்றியென கொண்டாட முடியாததென்பதால் காலம் கடந்து போகும் வரை தனிமையை இரைச்சலோடு கொண்டாட வேண்டியிருந்ததே.

தனிமையில் எரிச்சல்படும் மனதிற்கு ஆறுதல் சொல்ல எதை அழைப்பது?, யாரை நாடுவது?

இனிமையான பயணம்…


இனிமையான பயணம்…

எழுதி நாட்களாகிவிட்டது, கோவியாரின் ஆசியிருந்தும் ஏனிந்த நிலையென்பதற்காக காரணமும் தோன்றவில்லை, எழுதவும் தோன்றவில்லை. ஆசியை சந்தேகிக்கப்பதற்கில்லை, அதனால் மனம் துணிந்து எழுத வந்துவிட்டேன். எதை எழுதுவது என யோசிக்க வேண்டியதில்லை. முரட்டுக் காரணமுள்ளது. ஒருவார அதிரடி பயணமாக சொந்த ஊர் போய் வந்தேன். அதையே தொடராக எழுதலாம். ஆனால், தீபாவளி பயணத் தொடரே பாதியில் நிற்கிறது. அதற்கொரு இடம் கொடுத்து உட்கார வைக்க முடியாத போது, இன்னொரு தொடரா? தாங்காது. அதனால்,

வியாழன் பொங்கலன்று பிற்பகல் 4.15க்கு சென்னையில் தடம்பதித்த போது எனக்காக இரம்யா + அக்காவும் எனக்காக காத்திருந்தனர். கைப்பைகளை கைப்பற்றி வெளியேறும் வழிநேரே இரம்யா புன்னகையோடு காத்திருந்தார். கைகுலுக்கிக் கொண்டிருக்கும் வேளையிலேயே அனாசய வளர்த்தியில் அட்டகாசமான புன்னகையோடு சாதாரண உடையில் பளபளப்பான புன்னைகையோடு பழமைபேசி அண்ணன் வந்து சேர்ந்தார்.
ஒருவருடத்திற்கும் மேலான பழக்கம், அண்ணன் – தம்பி யென அழைத்துக்கொள்ளும் நெருக்கம், பலமுறை பேசியிருக்கிறோம், அசாத்திய சூழ்நிலைகளில் ஒத்த கருத்துகளையே வெளிப்படுத்தியதாலோ என்னவோ உறவு தானாகவே வலுப்பெற்றே இருக்கிறது. ஆனாலும் அண்ணனை நேரில் பார்த்து பழகும் வாய்ப்பைக் கொடுத்த இரம்யாவுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

இரம்யாவின் ஸ்கார்ப்பியோவிலேயே அனைவரும் இரம்யாவின் வீடு நோக்கி பயணமானோம். சென்னை, எனக்கு பழக்கமில்லாத இடம். மொத்தத்தில் விரல்விட்டு எண்ணிவிடும் அளவிலேயே பரிச்சமான இடம். விமான நிலையத்திலிருந்து கிளம்பிய நாற்பது நிமிடங்களுக்குள்ளாகவே இரம்யாவின் வீட்டினுள் அடைந்தோம். வெளியிலிருந்து பார்க்க சாதாரணமாக தோற்றம் கொண்ட வீடு, உள்ளே நுழைந்ததும் பெருத்த வேறுபாட்டைக் காட்டியது. உள்நுழைந்து அலுவலக அறையில் ஆளுக்கொரு இடமெடுத்து உட்கார்ந்து ஆட்டையை ஆரம்பித்து வலையுலகின் உள் – வெளி தோற்றம், வளர்ச்சி மற்றும் வருத்தம் தரும் நிகழ்வுகள் என பலவற்றை பேசிக்கொண்டிருக்கும் வேளையிலே, எனதருமை ”அழகிய சிங்கர்” வந்திணைந்தார். பாரதிராஜா படங்களில் வரும் வெள்ளையுடை தேவதையைப் போல் இருந்தார்(போறாமை தாம்ப்பா).

அப்புறம் என்ன, ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாகவதர் பாட்டுக்கச்சேரி தான். பாடினால் மட்டுமே விருந்து எனும் கட்டாயத்தால் மறுக்கவே முடியாமல், அழகிய சிங்கர் “ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல்…” என ஆரம்பித்தவரை சில பல சிரமமான பாடல்களைப் பாடசொல்லிக் கேட்டதும், குரல் சரியில்லை எனும் காரணத்தைச் சொல்லி தப்பிக்கொண்டார்.

இடையே கேபிள் சங்கர், வானம்பாடி நைநா - யுடன் அலைபேசியதும் அருமையான மறக்க முடியாத அனுபவம்.



பின்குறிப்பு:-
ஊருக்குள் நுழைந்த உடனே ஒரு அருமையான விருந்து கொடுத்த இரம்யா –வுக்கு சிறப்பு நன்றிகள் (இட்லி, சப்பாத்தி, புலாவ், தயிர் சாதம், உருளை சிப்ஸ், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி…இன்னும் என்னென்னவோ)


- தொடருமா?

 
©2009 அப்பாவி | by TNB