இனிமையான பயணம்…
எழுதி நாட்களாகிவிட்டது, கோவியாரின் ஆசியிருந்தும் ஏனிந்த நிலையென்பதற்காக காரணமும் தோன்றவில்லை, எழுதவும் தோன்றவில்லை. ஆசியை சந்தேகிக்கப்பதற்கில்லை, அதனால் மனம் துணிந்து எழுத வந்துவிட்டேன். எதை எழுதுவது என யோசிக்க வேண்டியதில்லை. முரட்டுக் காரணமுள்ளது. ஒருவார அதிரடி பயணமாக சொந்த ஊர் போய் வந்தேன். அதையே தொடராக எழுதலாம். ஆனால், தீபாவளி பயணத் தொடரே பாதியில் நிற்கிறது. அதற்கொரு இடம் கொடுத்து உட்கார வைக்க முடியாத போது, இன்னொரு தொடரா? தாங்காது. அதனால்,
வியாழன் பொங்கலன்று பிற்பகல் 4.15க்கு சென்னையில் தடம்பதித்த போது எனக்காக இரம்யா + அக்காவும் எனக்காக காத்திருந்தனர். கைப்பைகளை கைப்பற்றி வெளியேறும் வழிநேரே இரம்யா புன்னகையோடு காத்திருந்தார். கைகுலுக்கிக் கொண்டிருக்கும் வேளையிலேயே அனாசய வளர்த்தியில் அட்டகாசமான புன்னகையோடு சாதாரண உடையில் பளபளப்பான புன்னைகையோடு பழமைபேசி அண்ணன் வந்து சேர்ந்தார்.
ஒருவருடத்திற்கும் மேலான பழக்கம், அண்ணன் – தம்பி யென அழைத்துக்கொள்ளும் நெருக்கம், பலமுறை பேசியிருக்கிறோம், அசாத்திய சூழ்நிலைகளில் ஒத்த கருத்துகளையே வெளிப்படுத்தியதாலோ என்னவோ உறவு தானாகவே வலுப்பெற்றே இருக்கிறது. ஆனாலும் அண்ணனை நேரில் பார்த்து பழகும் வாய்ப்பைக் கொடுத்த இரம்யாவுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.
இரம்யாவின் ஸ்கார்ப்பியோவிலேயே அனைவரும் இரம்யாவின் வீடு நோக்கி பயணமானோம். சென்னை, எனக்கு பழக்கமில்லாத இடம். மொத்தத்தில் விரல்விட்டு எண்ணிவிடும் அளவிலேயே பரிச்சமான இடம். விமான நிலையத்திலிருந்து கிளம்பிய நாற்பது நிமிடங்களுக்குள்ளாகவே இரம்யாவின் வீட்டினுள் அடைந்தோம். வெளியிலிருந்து பார்க்க சாதாரணமாக தோற்றம் கொண்ட வீடு, உள்ளே நுழைந்ததும் பெருத்த வேறுபாட்டைக் காட்டியது. உள்நுழைந்து அலுவலக அறையில் ஆளுக்கொரு இடமெடுத்து உட்கார்ந்து ஆட்டையை ஆரம்பித்து வலையுலகின் உள் – வெளி தோற்றம், வளர்ச்சி மற்றும் வருத்தம் தரும் நிகழ்வுகள் என பலவற்றை பேசிக்கொண்டிருக்கும் வேளையிலே, எனதருமை ”அழகிய சிங்கர்” வந்திணைந்தார். பாரதிராஜா படங்களில் வரும் வெள்ளையுடை தேவதையைப் போல் இருந்தார்(போறாமை தாம்ப்பா).
அப்புறம் என்ன, ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாகவதர் பாட்டுக்கச்சேரி தான். பாடினால் மட்டுமே விருந்து எனும் கட்டாயத்தால் மறுக்கவே முடியாமல், அழகிய சிங்கர் “ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல்…” என ஆரம்பித்தவரை சில பல சிரமமான பாடல்களைப் பாடசொல்லிக் கேட்டதும், குரல் சரியில்லை எனும் காரணத்தைச் சொல்லி தப்பிக்கொண்டார்.
இடையே கேபிள் சங்கர், வானம்பாடி நைநா - யுடன் அலைபேசியதும் அருமையான மறக்க முடியாத அனுபவம்.

பின்குறிப்பு:-
ஊருக்குள் நுழைந்த உடனே ஒரு அருமையான விருந்து கொடுத்த இரம்யா –வுக்கு சிறப்பு நன்றிகள் (இட்லி, சப்பாத்தி, புலாவ், தயிர் சாதம், உருளை சிப்ஸ், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி…இன்னும் என்னென்னவோ)
- தொடருமா?