மசுரு – உசுரு



கடந்த இரண்டு நாட்களாக வலையுலகை சுற்றிவரும் இந்த காணொளிக்காக பதிவர்கள் கொதித்துப்போயுள்ளதை பல்வேறு இடுகைகள் காட்டுகின்றன.

அதிலும் குறிப்பாக கோவி அண்ணன், ஒரு நிதர்சனத்தை கொஞ்சம் அதிகமாகவே கூறியுள்ளதாகவே கருதுகிறேன். நாம் நாம் வலையுலகை நம்முடைய சொந்த மனவெளிப்பாட்டிற்கான இடமாகத்தான் பாவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இலங்கைத் தமிழர்களுக்கு கடந்த ஒரு வருடமாக நேர்ந்து கொண்டிருக்கும் உச்சபட்ச அவலத்தை வலையுலகில் கூவிக்கூவி கூறினாலும், அது சென்றடைந்தது தரையிலிருந்து பத்தடி உயரத்தில் அண்டவெளியில் வாழும் பதிவர்களுக்கு மட்டுமே.

சுயவிருப்பம் இல்லாமல் கூட, இன்றய சமுதாய ஓட்டத்திற்கு ஈடுகொடுக்கவேண்டி சொந்த ஊரிலிருந்து பிடி மண்கூட இல்லாமல் ஏதோ ஒரு ஊரிலோ, நாட்டிலோ பணி செய்து அண்டிப் பிழைத்து வருகிறோம்.

உணவு, உடை, உறைவிடம் போன்ற மனித அடிப்படைத் தேவையைக் கூட தன் சொந்த உழைப்பில்லாமல் பெற்றுவாழும் ஒட்டுண்ணி வாழ்க்கையை வாழபழகி அதில் இன்புற்று வாழ்ந்து வருகிறோம்.

இனி, இனம், மொழி, சமூகத்திற்காக களத்தில் இறங்கி, மாற்று கருத்துடையோர், அரசு இயந்திரம், அரசின் கொள்கைகளை எதிர்த்து பணியாற்றத் துணிவோர் எண்ணிக்கை, விரல்களின் எண்ணிக்கையைத் தாண்டுமா என்பது சந்தேகமே!

ஆனால், அதே சுகவாசி பதிவுலகம் தான் தனி மனிதனின் உடல்நிலையை மேம்படுத்த தன்னாலான உதவியை தாராளமாக வழங்கியது என்பதும் கண்கூடு. தேனீக்கள் கூடிக்கட்டிய தேன்கூடு.

மொத்த தொகையை முதலில் கேட்டதும், அதிர்ச்சியடைந்த தனியுள்ளங்கள் கூட தன்னாலான சிறுதுளிகளை சேகரிக்க ஆரம்பித்ததும், அதே சிறு சிறு துளிகளே இரண்டே வாரத்தில் பெரும் வெள்ளமானதையும் கண்டோம். இதை நிறைவேற்றியதில் பெரும் பங்கு பதிவர்களே சொந்தம்.

ஆக, இந்த இரண்டு சம்பவங்களையும், பதிவர்களின் செயற்பாட்டையும் ஒப்பு நோக்குகையில் தானாக ஒரு உண்மை வெளிவரும். அது,

ஆழமான, நீளமான கடலாக இருந்தாலும் நீந்தி கடக்க பதிவர்கள் தயார் தான். ஆனால், அதிலிருக்கும் திமிங்களங்களும், சுறாக்களும் தன்னை சூறையாடாது என்ற குறைந்தபட்ச உயிர் உத்திரவாதத்தினை எதிர்பார்க்கிறார்கள் நம் பதிவர்கள்.

இதை தவறெனக் கூற எந்த முகாந்திரமும் இல்லை. ஒரு கொடூர நிகழ்ச்சியால் தன் இனம் அழிவதைக் கண்டு கொதிக்கும் நண்பர்கள், அடுத்தவரில் உதவியை எதிர்பார்க்கும் முன், தான் களத்தில் இறங்கிய பின் மற்றவர்களை அழைத்தால் தான் அந்த போராட்டம் வெற்றியை நோக்கி நகரும்.

அது இல்லாத பட்சத்தில் வார்த்தைப் போருக்கு குறைவேதும் இராது!!!

13 comments:

நட்புடன் ஜமால் said...

இதே கருத்தை தான் நான் பின்னூட்ட எண்ணினேன் அந்த பதிவில்

ரொம்ப சூடாக இருந்ததால் மெளனமாக வந்து விட்டேன்.

--------------

பதிவர்களின் ஒற்றுமை உதவி விடயத்தில் ஆச்சர்யத்திலும் சந்தோஷத்திலும் ஆழ்த்தியது.

சி தயாளன் said...

வழி மொழிகிறேன்...ஆனால் ஈழத்தமிழர் பிரச்சினையை எவ்வளவு சிக்கலாக்க முடியுமோ..அந்தளவுக்கு சிக்கலாக்கியாச்சு (எல்லாரும் சேர்ந்து தான்....நம்மவர்களும் சேர்ந்து தான்). இனி தீர்வு என்பது கானல் நீர்தான்...

ஆ.ஞானசேகரன் said...

//’டொன்’ லீ said...

வழி மொழிகிறேன்...ஆனால் ஈழத்தமிழர் பிரச்சினையை எவ்வளவு சிக்கலாக்க முடியுமோ..அந்தளவுக்கு சிக்கலாக்கியாச்சு (எல்லாரும் சேர்ந்து தான்....நம்மவர்களும் சேர்ந்து தான்). இனி தீர்வு என்பது கானல் நீர்தான்...//

ம்ம்ம் ரிபீட்ட்ட்ட்

பீர் | Peer said...

//தான் களத்தில் இறங்கிய பின் மற்றவர்களை அழைத்தால் தான் அந்த போராட்டம் வெற்றியை நோக்கி நகரும்.//

நிதர்சன வார்த்தைகள், இதற்கு சிங்கை நாதனே சாட்சி.

கோவி.கண்ணன் said...

//அது இல்லாத பட்சத்தில் வார்த்தைப் போருக்கு குறைவேதும் இராது!!!//

ஒருவரை கையையும் வாயையும் கட்டிவிட்டால் வார்த்தை போர் கூட செய்ய முடியாது,அந்த இடத்தில் ஒண்ணுக்கு அடித்து தான் எதிர்ப்பு காட்ட முடியும்.

கையால் ஆகாத நிலைமையை வெளிப்படுத்தும் குறியீடுகளாக வசைச் சொற்களைத் தான் பயன்படுத்த முடியும். அதையும் தவறு என்று சொல்வது, 'அடிமைகளுக்கு பேசுவதற்க்குக் கூட தகுதியே இல்லை' என்று சொல்லி அடக்குமுறைக்கு மறைமுக ஆதரவு போன்றது.

புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்

அப்பாவி முரு said...

// கோவி.கண்ணன் said...
//அது இல்லாத பட்சத்தில் வார்த்தைப் போருக்கு குறைவேதும் இராது!!!//

ஒருவரை கையையும் வாயையும் கட்டிவிட்டால் வார்த்தை போர் கூட செய்ய முடியாது,அந்த இடத்தில் ஒண்ணுக்கு அடித்து தான் எதிர்ப்பு காட்ட முடியும். //

ஒண்ணுக்கு அடித்தாலும், அது எதிர்ப்பின் வெளிப்பாடல்ல, அது பயத்தின் வெளிப்பாடே...

//கையால் ஆகாத நிலைமையை வெளிப்படுத்தும் குறியீடுகளாக வசைச் சொற்களைத் தான் பயன்படுத்த முடியும். அதையும் தவறு என்று சொல்வது, 'அடிமைகளுக்கு பேசுவதற்க்குக் கூட தகுதியே இல்லை' என்று சொல்லி அடக்குமுறைக்கு மறைமுக ஆதரவு போன்றது.//

முதலில் நாம் அடிமையில்லை என்பதே எந்து கருத்து.

ஏன் பேசியே காலம் தள்ளணும், செய்யணும் என ஆசையிருப்பவர் களத்தில் இறங்கினால் எல்லாம் சரியாகும். என்பதே என் கருத்து.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

சிங்கை நாதனுக்கு நம்மால் உதவ முடியும்.ஆனால் ஈழத் தமிழர்களுக்கு அரசு நினைத்தாலோழிய நாம் தனிப்பட்ட முறையில் ஏதும் செய்ய முடியாது என்பது நிதர்சனம்.ஆனால் இப்படி இடுகைகள் சங்கிலித்தொடராக வருவதால் ஒருவேளை ஏதேனும் நடக்காதா என்ற நப்பாசை எல்லோருக்கும் உண்டு.சும்மாயிராமல் குறைந்த பட்சம் எழுதியாவது
எதிர்ப்பைக் காட்டலாம் என்பது என் கருத்து.

வால்பையன் said...

:(

நையாண்டி நைனா said...

"ஸ்ரீ" அவர்களின் எண்ணமே எனது எண்ணமாகவும் உள்ளது....

priyamudanprabu said...

அப்பாவி நீயுமாய்யா???????

priyamudanprabu said...

மசுரு ன்னு தலைப்ப பார்துட்டு முதல் பின்னூட்டம் போட்டுடேன்


.....


நல்ல பதிவு முரு

கார்க்கிபவா said...

ம்ம்ம்

அன்புடன் நான் said...

தங்களின் கருத்தை நான் ஆதரிக்கிறேன் முருகு.

உறவினர் இறந்துவிட்டால் அழுகிறோமே... அவர்கள் உயிர் பிழைத்து விடுவார்கள் என்றா?
கண்ணீர் ஒரு வடிகால் அது போல்தான் இதுவும். சமயத்தில் வடிகால் கூட வழியமைக்கலாம்.

//சிங்கை நாதனுக்கு நம்மால் உதவ முடியும்.ஆனால் ஈழத் தமிழர்களுக்கு அரசு நினைத்தாலோழிய நாம் தனிப்பட்ட முறையில் ஏதும் செய்ய முடியாது என்பது நிதர்சனம்.ஆனால் இப்படி இடுகைகள் சங்கிலித்தொடராக வருவதால் ஒருவேளை ஏதேனும் நடக்காதா என்ற நப்பாசை எல்லோருக்கும் உண்டு.சும்மாயிராமல் குறைந்த பட்சம் எழுதியாவது
எதிர்ப்பைக் காட்டலாம் என்பது என் கருத்து.//

இதுதான் என் க‌ருத்தும்.

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB