பத்தாண்டிற்க்கொரு பஞ்சம்

பொருளாதார நெருக்கடி தரும் வேதனையைவிட, நெருக்கடி தீரும் வேளைப் பற்றி வரும் சேதிகள் பீதியைக் கிளப்பிய வண்ணமே இருக்கின்றன. இல்லாமல் இருக்குமா?, கடன் அட்டையை தேய்த்தும், எண்களை தட்டியும் வாங்கி, பிறர் புழுங்க, நாம் புழங்கிய பொருள்கள் ஊருக்குள் ஒரு தனி கவனத்தை நம்பக்கம் திருப்பியே இருக்கிறது.

இனி கால் தரையில் பட எங்காவது நடக்கமுடியுமா?, எதிர்பார்ப்புகள், குறைந்தபட்சம் ஆறங்குல உயரத்திலே ஆளை எதிர்பார்க்கும் இந்த ஊர். இருசக்கர வாகனத்தில் வந்தாலும், பொது பேருந்தில் வந்தாலும் ஏளனம் செய்ய ஒரு கூட்டம், நம்மிடம் வாங்கிகுடித்தே வாயும்-வயிறும் வளர்த்து காத்திருக்கிறது. குடித்தது தப்பா? இல்லை குடிக்கக் கொடுத்தது தான் தப்பா? என்ற ஆராய்ச்சிக்கான நேரம் இது இல்லை. காத்திருக்கிறார்கள். சமாளிக்க வேண்டும். ஏனெனில், சாதித்தாலும் – சரிந்தாலும் வாழ்ந்தாக வேண்டுமே.

வேலையிடத்தில் வரும்படியை காரணம் பலகூறி குறைத்தாலும், தாராளமாய் செலவு செய்ய பழகிய மனதை, தடாலடியாக ஓர் இரவினில் மாற்ற முடியவில்லை. கடைத்தொகுதியை கடந்து வருகையில் கடையிலிருக்கும் பெண்களையும் தாண்டி, அவர்கள் தரும் அதிரடி விலைக்குறைப்புகள் சுண்டி இழுக்கின்றன. பெண்களைப் பார்ப்பதர்க்காக கடைத்தொகுதியை சுற்றி, பணத்திமிரினால் பணப்பையை இளைத்து, கைப்பையை கொழுக்கி வலம் வந்த காலம் போய், முழுவிடுமுறை நாளிலும் முழுகைதியாய் வீட்டுசிறையினில் காத்திருக்கும் காலம் வந்ததே.

எப்போதும் உடலினில் ஒரு மினுமினுப்பு, உடையினில் ஒரு பளபளப்பு, கைபேசியோ காலத்திற்க்கும் புதுசு என சொகுசாய் வாழ்ந்த எங்கள் வாழ்வு, இன்று அரை(றை) இருட்டில், வலைவீச்சிலே(இணையம்) காலம் தள்ளும் படியானதே. வலைவீச்சில் தங்க மீன்கள் சிக்கினாலும், அதற்க்கு செலவு செய்யவேண்டுமே என்ற எண்ணமே கண்களை மங்க வைக்கிறது.

எங்கு?, எதனால்?, எப்படி ஆரம்பித்தது?, என்னிடம் எப்படி வந்தது? என எனக்கு தெரியவில்லை, கடைசியில் என்னையும் வந்து தாக்கிவிட்டது, இந்த பாழாய் போன பொருளாதார நெருக்கடி. வாரம் முழுதும் வேலை செய்துகொண்டிருந்தேன், இப்போது மூன்று நாள் வேலை,அடுத்த நாலு நாள் விடுப்புவிட்டு வீட்டு சிறையில் வைக்கின்றனர்.

கைசமையலை மறந்து, கடைகளில் வாசம்பிடித்து மூக்கிற்க்கும், நாக்கிற்க்கும் அடிமையாய், சிறுவயதில் கஷ்ட்டப்பட்டு தேற்றிய நெஞ்சினையும் விட அகலம் அதிகமாகி கொண்டிருந்த வயிற்றை பற்றி கவலையில்லாமல் இருந்த என்னை, மீண்டும் எண்ணை வாசம் வீசும் சமையலைறைக்கு கொண்டுவந்து தள்ளியிருக்கிறது இந்த பொருளாதார நெருக்கடி.

சமைப்பது போரல்ல(Bore), சவால்தான், ஆனால் நானே சமைத்து, நானே சாப்பிடுவது என்பது பெரும் முரண் எனக்கூறி விட்டுவந்த சமையலறை, விட்டுப்போன கணவன் வீடு வந்ததைக் கண்ட மனைவிபோல், மீண்டும் பாசமாய் ஒட்டிக்கொண்டது. சொந்த சமையலில் ருசிக்கும் குறைவில்லை, அளவும் மிஞ்சவில்லை, ஹும் தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.

கையில் காசில்லை என்றாலும், காலத்தை விட மனசில்லை. சுதாகரிக்க வேண்டும், உடம்பையாவது காப்பாற்ற வேண்டும்.

ஆடும் வரை ஆடியாயிற்று. மார்பளவை விட வயிற்றளவு பெரிதாகிப் போனது. சிக்ஸ் பேக்ஸ் (Packs) போய், சிக்ஸ் பேக்ஸ் (Bags) தொங்கும் உடம்பானது. சொகுசு வாழ்க்கையில் உடலை சிதைத்தாயிற்று.

பத்தாண்டுகளுக்கொரு பஞ்சத்தில் வாழ்ந்த என பாட்டன், பூட்டனுக்கு சொல்லாமலே கொடுத்த கொழுப்பை சேமிக்கும் சூச்சமத்தை, பாழாய் போன சந்ததி சரடு(ஜீன்) என்னிடமும் தந்திரமாய் வைத்திருக்கிறது. அவன் தான் பஞ்சத்திலே வாழ்ந்தான், பழுத்திருக்கும் காலத்திலும் நாளுக்கிருவேளைக் கஞ்சி என்றால், பஞ்சம் வந்த காலத்தில்? அவனுக்கு தான் கொழுப்பை சேமிக்கவேண்டும். ஆனால் நான் என் பாட்டன் – பூட்டன் போல் இல்லையே!., அன்றாடம் மூன்று வேளை உணவு, தனியே எண்ணையில் பொறித்தவையும் கொறிப்பதற்க்கு உணவில் உண்டு. எனக்குத்தான் பஞ்சம் வராதே, எனக்கேன் கொழுப்பை உடலில் சேகரிக்கும் பழக்கம்? என்றிருந்தேன்.

உணவுக்கு வந்தால் தான் பஞ்சமா? இன்று என் பொருள் ஈட்டலுக்கு வந்ததே பஞ்சம்!. படித்ததில் நல்லவைகளை நடைபடுத்தும் நேரமிது. மீண்டும் நான், நானாகும் நேரமிது. போனதைப் பற்றி பேசியும் பலனில்லை, நடப்பதைக் கண்டு புழம்பியும் பலனில்லை. பொன்னான காலம் கனிந்திருக்கிறது, எனக்கே எனக்காக வாரத்தில் நான்கு நாட்களிருக்கின்றன. என் உடம்பிற்க்கு, என் சூழலுக்கு எது நல்லதோ, எதை என் சந்ததி சரடு (ஜீன்) ஒத்துக்கொள்ளுமோ, அதை மட்டும் நடைமுறை படுத்த வேண்டும்.


இந்திய உடலுக்கு ஒவ்வாத இந்த மேற்க்கத்திய உணவு கலாச்சாரத்தை விடுத்து, ”தேவைக்கேத்த உணவு - சரியான நேரத்தில். தேவையான உடலுழைப்பு, மார்பின் சுற்றுளவை விட சிறிய வயிற்றின் சுற்றளவுக்காக” என்பதை தாரகமாக்கி, உடைக்க முடியாத சூச்சம சரடு உடன் ஒன்றி வாழ்க்கையை இனிமையாக்கிட வேண்டும்.

பழுத்த காலத்தில் ஏறிய கொழுப்பை, இயற்க்கையாய் வந்த உணவு பஞ்ச காலத்தில் கரைத்த என் பாட்டனைப் போல், நம் உடலில் ஏறியிருக்கும் கொழுப்பை, இந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் கரைத்தால், வந்திட்ட பஞ்சம் கூட ஒருவகையில் வளமே.

6 comments:

நட்புடன் ஜமால் said...

\\ இந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் கரைத்தால், வந்திட்ட பஞ்சம் கூட ஒருவகையில் வளமே.\\

நல்ல விதமாக எதையும் எடுத்துக்கொள்ளும் குணம்

நல்லவை பயக்கும்.

இராகவன் நைஜிரியா said...

// தாராளமாய் செலவு செய்ய பழகிய மனதை, தடாலடியாக ஓர் இரவினில் மாற்ற முடியவில்லை. //

சரியாகச் சொன்னீர்கள் தம்பி.

செல்வம் ... செல்வோம் என்பதனால்தான் அது செல்வம்.

பணம் வரும்போது சேமிக்கும் பழக்கம் இருந்தால், இப்போது கவலைப் படாமல் இருக்கலாம்.

இராகவன் நைஜிரியா said...

//
கைசமையலை மறந்து, கடைகளில் வாசம்பிடித்து மூக்கிற்க்கும், நாக்கிற்க்கும் அடிமையாய், சிறுவயதில் கஷ்ட்டப்பட்டு தேற்றிய நெஞ்சினையும் விட அகலம் அதிகமாகி கொண்டிருந்த வயிற்றை பற்றி கவலையில்லாமல் இருந்த என்னை, மீண்டும் எண்ணை வாசம் வீசும் சமையலைறைக்கு கொண்டுவந்து தள்ளியிருக்கிறது இந்த பொருளாதார நெருக்கடி. //


கைச்சமையல் உடலுக்கு மிக நல்லது. அதனால் அதையே கடைபிடியுங்க

அப்பாவி முரு said...

வாங்க அப்பாவி தமிழன், ஜமால், ராகவன் அண்ணன்.,

கருத்துக்கு நன்றி

அண்ணன் வணங்காமுடி said...

பொருளாதாரமும் இந்த வயிறும் சருகிய நிலையில்

அப்பாவி முரு said...

//அண்ணன் வணங்காமுடி சொன்னது…
பொருளாதாரமும் இந்த வயிறும் சருகிய நிலையில்//

புரியவில்லையே வணங்காமுடி.

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB