ராஜிவ் காந்தி கொலையும், நாங்களும்...

மே 21, 1991 நள்ளிரவுக்கு மேல் இந்தியா மட்டுமல்லாது அருகாமையில் இருக்கும் நாடுகளும் அதிர்ந்து போனது... இந்தியாவில் குடியரசு தலைவர் ஆட்சியும், தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சியும் நடந்து கொண்டிருந்ததால் அதிகாரிகள் உடனடியாக முடிவெடுத்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மாநிலம் முழுவதும் சோதனை சாவடிகள் அமைத்து போக்குவரத்து முழுமையாக தடைபட்டது.

அதே நேரம், தமிழகத்தின் மத்தியல் இருக்கும் ஒரு சின்ன ஊரில்...
ஆண்களும், பெண்களுமாக நான்கைந்துபேர், வீட்டிலிருக்கும் சிறுவர்களில் நால்வருக்கு தேவையான பொருள்களை பைகளில் எடுத்து வைத்துக்கொண்டு இருந்தனர்.

நள்ளிரவை தாண்டிய பொழுது, மெதுவாக கட்சிகாரர்களுக்கு தகவல், தொலைபேசி வழியாகவும், இல்லாதவர்களுக்கு மனித தொடர் மூலமாகவும் மெதுவாக பரவிக்கொண்டு இருந்துதகவல் கிடைத்தவர்கள் நம்ப முடியாமலும், தகவலில் இருந்த விஷயம் மிக பெரியதாக இருந்ததால் மேற்கொண்டு தூங்கவும் முடியாமல், உறுதிப்படுத்தவும் முடியாமல், உறுதிப்படுத்த குறைந்த பட்சம் வானொலியில் ஒலிபரப்பு ஆரம்பிக்க வேண்டும், அதற்க்கு இன்னும் இரண்டு மூன்று மணிநேரம் இருக்கிறது. மனதில் தோன்றிய படபடப்பையும், பிரம்ம முகூர்த்தத்தின் குளிரையும் மீறி உடலில் தோன்றிய வியர்வையும் அடக்க வழியில்லாமல், கிழக்கே வரும் உதய சூரியனுக்காக எல்லோரும் காத்திருக்க ஆரம்பித்தனர்.

அதே நேரத்தில்(அதிகாலை மணி மூணு), அந்த வீட்டிலிருந்த பெண்களில் மூவர் மட்டும் எழுந்து, கடைசி கட்ட ஆயத்த பணிகளில் இடுபட ஆரம்பித்தனர். முதல் வேளையாக மூன்று கல்லினை கூட்டி அடுப்பு பற்றவைத்தனர் சமையல் செய்ய.

பின்ன பழனில பெரியவனுக்கும், சின்னவனுக்கும் மொட்டை எடுத்திட்டு வரவழியில எங்க சாப்புடுறது. கடையில எல்லாம் சாப்பாடு நல்லாயிருக்குமோ என்னவோ? ஏய், அடுப்புல அரிசியப போட்டுட்டேன், ராத்திரி செய்ஞ்ச கத்திரிக்கா புளிக்காய அந்த தூக்குவாளியில மொதல்ல எடுத்துவயி" ன்னு எங்கம்மா, எங்கத்தையிட்ட சொன்னாக.

நாளைக்கி பழனிக்கி போரோம்முனு ராத்திரி பூரா தூக்கமே இல்லை எனக்கு, சத்தங் கேட்டு மெதுவா எந்திரிச்சு வந்ததை பார்த்த எங்கம்மா, ஏன்டா நீ முழிக்கிற இன்னும் ரெண்டுமணிநேரமிருக்கு போயி படு, இங்கிருந்து அடுப்புல தொந்தரவு பண்ணாத. அம்மா மெரட்டுராக, சரி சும்மாவாச்சும் போயி படுப்போம்-இன்னு நானும் பாயிக்கு போயிட்டேன்.

என்னடா இது, எப்பவும் வெரசா விடியிற வானம் இன்னக்கீன்னு விடிய மாட்டேங்கிது. சரி எதுக்கும் ரேடியோவ போட்டு சரி பார்த்துக்கலாம், அதுவேற சனியன் நீசுக்கு போடுறப்ப வேலசெய்யாம போயிரப்போது. டிக்...ங்கி...ங்கி..., ஐய்யயோ சத்தம் முழுசா வல்லையே. கட்ட தீந்து போச்சா? ஈ...ன்னு தலைய சொரிஞ்சிட்டு , சரி மூல கடையில பேப்பர் வந்திருச்சான்னு போயி பாத்திட்டு வருவோம். காலைல இந்தாளுக்கு என்னாச்சுன்னு மாடு சத்தத்தை கேட்டு மெரண்டு பாக்குது.

டே... முருகா.. எந்திரிடா., அவிங்களையும், உங்கப்பாவையும் எழுப்பிவிடுடா... இது அம்மா.நான்தான் தூங்கவே இல்லையே... பெரியவனையும், சின்னவனையும் காலுல எத்திவிட்டுடு... நேரா போயி சட்டிய பாத்தா... ஏழு எட்டு பேத்துக்கு வார மாதிரி புளிசோறு- தயிர் சோறும் இருந்துச்சு. சின்ன வாளியில கத்திரிக்காய் புளிக்காய் (தொட்டு நக்கி பாத்தா சுர்ருன்னு இருக்கு) (பல்லுல படாம ஏன்னா பல்லு வேலக்கலைல) பக்கத்துல மிச்சரும் , வாழை இலை கட்டும் இருக்குது. சாப்புடுரப்ப அன்க எங்கயாச்சும் ஆமைவடை வாங்கிக்கலாம்- இது அத்தை. இன்னைக்கி நல்ல வேட்டை, ஊரு சுத்தலாம், கையில எப்படியும் கொஞ்சம் காசும் கிடைக்கும்- இது மனசுக்குள்ள நானா நெனைச்சுக்கிட்டு குளிக்க போயிட்டேன்.

ஏம்ப்பா... பேப்பர் எப்ப வரும்? டீயா?.. காப்பியா?... ஆமா இன்னைக்கி என்ன இந்நேரம், அதுவும் பேப்பர கேட்டுகிட்டு... ஒரு விஷயம்...சரி பார்க்கணும்.. டீகடைகாரன்- நாலுமணி பஸ்சு வல்ல, அதனால பேப்பர் வல்ல. திரும்பவும் தலைய சொரிஞ்சிட்டு, சரி ஊருக்குள்ள அண்ணே வீட்டுக்கு போவோம், அண்ணுக்கு உறுதியா தெரியும், இல்லைனா மாவட்டத்துக்கு போனு போட்டு கேட்ருவோம்.

ஊருக்குள்ள வாரப்பவே, தெரு பூரா ஆம்பளைங்க நடமாட்டமா இருக்கு, அதுலயும் எட்டு மணிவரைக்கும் தூங்கும் மு.க. முத்தையன் கூட ஆறு மணிக்கே வெளியில திரியிறான். அப்ப.. அப்ப...அது உண்மைதானா? மனமுடைந்தார் காங்கிரஸ் கட்சி சின்ன பெரியப்பா தவசி.

அதே ஆறுமணிக்கு, புது டவுசர்-சட்டை போட்டுக்கிட்டு மிலிட்டரிகாரன் மாதிரி நிக்கிறேன் நானு, அப்ப அத்தையோட, மாமியா ஒடிவது எங்கப்பாட்ட, "ஏம்ப்பா ராத்திரி ராசிவ் காந்திய கொன்னுபுட்டங்கலாமே, நீங்க எப்படி பழனிக்கு போகப் போறீங்க?" .உடனே எங்கப்பா "என்னது ராஜிவ் காந்திய கொன்னுட்டாங்களா, ரேடியோவுளையும் ஆறேமுக்காலுக்கு தான் நீஸ், டாய முருகா, நீ போயி பஸ்ஸ்டாண்டுல என்னனு பாத்துட்டு வா" . என்னடா மதுரைக்கி வந்த சோதனை-ன்னு மனசுக்குள்ள நொந்துகிட்டு, நடக்கயில நம்ம மாமா (தி.மு,கட்சி காரர்) வீட்டு வாசல்ல பத்திருபது பேரு நிக்கிறாங்க, செவுத்துக்குள்ள கொஞ்சம் விறகு குச்சி கெடக்குது, அதுல்ல ஒருத்தர், இங்க யாரும் வந்தாங்கன்னா பாத்துக்கங்கப்பான்னு விறகு குச்சிய பாத்தாரு. அங்க
இருந்த பக்கத்து வீட்டு பெரிசு, டாய, எங்கடா போற-ன்னாரு. "இல்ல பெரீப்பா, அத்த மகன்களுக்கு காதுகுத்துக்கு மொட்டை எடுக்க எல்லோரு பழனிக்கி போறோம்". டாய, ராத்திரி ராஜிவ் காந்திய வெடிகுண்டு வச்சு கொன்னுட்டாங்க, அதனால பசெல்லாம் ஓடாது, போயி கொப்பகிட்ட சொல்லு-ன்னாரு.போச்சுடா, பழனியுமில்ல, பாஞ்சாமிருதமுமில்ல - நு மனசுக்குள்ள நினைச்சுகிட்டு வீட்டுல போயி சொல்லுறேன்.


எல்லோரும், பசங்களையும், பாத்திரத்தையும் மாத்தி, மாத்தி பாத்தாங்க.
கெளவி உடனே எங்கப்பாவிடம், ஏம்ப்பா நாளன்னைக்கு காதுகுத்து, இன்னைக்கி மொட்டை எடுக்கணும், கோயமுத்தூருக்கு பத்திரிக்க வைக்கப போன இவிங்க அப்பன் வேற வரணும் , எப்படி வரப்போறான்?


பத்திரிகை அடிச்சு எல்லோருக்கும் கொடுத்தாச்சு, பந்தல் போட்டாச்சு, இப்ப என்ன செய்றதுன்னு எல்லோரும் முளிச்சாங்க. எனக்கு பஞ்சாமிருதம் போச்சேங்கிற கவலை மனசைவிட்டு போகல...


பின் குறிப்பு:-

கோயமுத்தூரிலிருந்து மாமா வரமல்லே, உள்ளூரிலே மொட்டை எடுத்து (முடிய தனிய கட்டிவச்சு பின்னர் பழனியில் சேர்த்தாயிற்று), வந்த உள்ளூர் மக்களுக்கு மத்தியின் பெரியவனுக்கும், சின்னவனுக்கும் காது குத்து சிறப்பாக( பலருக்கு வெறுப்பாக) நடந்து முடிந்தது.

பாதி பேர் வராததால், வசூல் எதிர்பார்த்தபடி இல்லை. அதனால் அத்தை இரண்டு வருடங்கள் கழித்து ஒரு பிரச்சனை இல்லாத நன்நாளில் கிடாய்வெட்டு வைத்து வசூலை நிரப்பினார்கள். என் அப்பா இரண்டுமுறையும் கலங்காமல் கல்லாவை நிரப்பினார்.

பின் குறிப்பு(2) :-

கருப்பு எழுத்திளிருப்பது உண்மை கதை, பச்சை எழுத்திளிருப்பது கதையின் சுவாரசியத்திற்காக... ஹீ...ஹீ...




பின் குறிப்பு(3):-

தலைப்பு சும்மா, அன்று நான் பட்ட கஷ்டத்தை சொல்வதற்கு மட்டுமே. தயவு செய்து யாரும் C.B.I, க்கு தகவல் கொடுத்து அவர்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

நானெல்லாம் உளவு துறை அளவுக்கு ஒர்த் இல்லாதவன்.

3 comments:

Anonymous said...

இப்ப தான் உன்மை வருது

Anonymous said...

தம்பி முரு இப்பதான் போலீசுக்கு தகவல் கொடுத்திட்டு வந்தேன் :)

அப்பாவி முரு said...

வாங்க சுந்தரமீனாக்ஷி2000, jjjj.,

அண்ணே, நானொரு அப்பாவி, என்னை இப்படி போலீஸ்ல மாட்டிவிட்டுடீங்களே.

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB